LOADING...
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 05, 2026
03:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில், குறிப்பாக ஜனவரி 2 முதல் ஜனவரி 5 வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் அதிகபட்சமாக 26 செமீ மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் ஜனவரி 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் புதிய வளிமண்டல சுழற்சி அல்லது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மழை

மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்

ஜனவரி 9 முதல் சென்னை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்யக்கூடும். இருப்பினும், ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சில இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதன் பிறகு மீண்டும் மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம்

பொதுமக்கள் கவனத்திற்கு

பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அல்லது லேசான குளிரும் நிலவக்கூடும். மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்லும்போது வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement