தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்களா அமைச்சர்கள்?
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சியைப் பிடித்த பிறகு, அதன் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது. 2026-27 நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரியவில்சனும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்தனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 12 அன்று அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர். தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறைக்குப் பின், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
மானியக் கோரிக்கை
இன்றைய மானியக் கோரிக்கை விவாதம்
இன்று முதல் பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய இரு முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் விவாதிக்கவுள்ளனர்.
விவாதங்களின் முடிவில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தங்களது துறைகள் சார்ந்த முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
கூடுதல் பொறுப்பு
கூடுதல் பொறுப்புகளைக் கவனிக்கும் அமைச்சர்கள்
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட துறைகளின் கோப்புகளைக் கவனிக்க ஏற்கனவே அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படையிலான பணி தொடர்பான கோப்புகளைச் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கவனிப்பார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த கோப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கவனிப்பார்.
எனவே, வரும் நாட்களில் இந்தத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.