தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!
குஜராத்தில் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டு செய்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். தென் கொரிய நாட்டை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்பவர் இந்தியாவிற்கு சுற்றலா பயணியாக வந்துள்ளார். இவரது உறவினர்கள் சிலர் குஜராத்தில் வசித்து வருகின்றனர். இவர்களை சந்திக்க வந்த ஷின், நேற்று விசத்பூரா என்ற பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். இந்த விசத்பூரா பகுதியில் பாராகிளைடிங் என்னும் சாகச விளையாட்டு மிகவும் பிரபலமானது. பலூன் மூலம் ஆகாயத்தில் பறக்கும் பாராச்சூட் போன்ற சாகச விளையாட்டு இது. இதை மிகவும் ரசித்த ஷின் இதில் விளையாடி பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
விளையாட்டு விபரீதமானது!
இதில் 50 அடி உயரத்தில் அவர் பறந்து கொண்டிருந்த போது ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. பாராகிளைடிங்கின் 'கேனோபை' என்ற கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கீழே விழுந்த ஷின், பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். இதனால், அங்கிருந்த சுற்றலா பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த செய்தியை கொரிய தூதரகத்திற்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.