30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றுள்ளார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பலம் வாய்ந்த கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை 18,953 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துப் பிரசாந்த் கிஷோர் தனது முதல் தேர்தல் களத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
முக்கிய வேட்பாளர்கள்
தேர்தல் வாக்குகள் மற்றும் முக்கிய வேட்பாளர்களின் நிலவரம்
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் மொத்தம் 63,203 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் 44,250 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அதேவேளையில், அம்மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பில் போட்டியிட்ட ரேகா குமாரி 14,085 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
தேர்தல் உத்தி
முன்கூட்டியே தொடங்கப்பட்ட தீவிரப் பிரச்சார உத்தி
இந்த இடைத்தேர்தலில் பிற கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே, பிரசாந்த் கிஷோர் பாங்கிபூர் தொகுதியில் தனது தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து உரையாடியதுடன், வாக்குச்சாவடி மட்டத்திலான உட்கட்டமைப்பைப் பலப்படுத்தினார்.
குறிப்பாக பீகார் மாநில இளைஞர்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை முதன்மை மையப் பொருளாக வைத்து அவர் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
புதிய திருப்பம்
பீகார் அரசியலில் உருவாகும் புதிய திருப்பம்
பாஜகவின் தேசியத் தலைவர்களில் ஒருவரான நிதின் நபினின் நீண்டகாலத் தொகுதியாக இருந்த பாங்கிபூரில் கிடைத்த இந்த வெற்றி, பீகார் மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜன் சுராஜ் கட்சி தனது முதல் தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக பீகார் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.
இந்த வெற்றி வரவிருக்கும் பீகார் மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.