
"மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு தலைவராக இருப்பேன்" - விழுப்புரத்தில் ராமதாஸ் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிலவும் உள் மோதல்கள் குறித்த கேள்விகளுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், "மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர் மட்டுமே" என வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி உள்ளக முரண்பாடுகள், நிர்வாக மாற்றங்கள், அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
நெருக்கடி
பாமகவில் நெருக்கடியான சூழ்நிலை
கட்சி தலைமைப் பொறுப்பு என்பது தொடர்பாக, பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், 15 வன்னியர் சங்க நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புமணியுடனான பிரச்சனை குறித்து பேசிய ராமதாஸ், "நாங்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம்; எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும். ஆனால் அது இன்னும் வரவில்லை. நான் தொடங்கிய கட்சியில், நான் சொல்வதுபோலவே செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.
கருணாநிதி பாணி
கருணாநிதி- ஸ்டாலின் பாணி போல் செயல் தலைவர்
தந்தை-மகன் இருவரின் பதவிப் பங்கு குறித்து, "நான் கருணாநிதிபோல தலைவராக இருப்பேன். அன்புமணி ஸ்டாலினைப் போல செயல் தலைவராக இருக்க வேண்டும்" என்றார். தன் 60வது திருமண விழாவில் அன்புமணி பங்கேற்காதது குறித்து கேட்கப்பட்டபோது, ராமதாஸ் கண் கலங்கினார். "மகன் வரவில்லை என்றால் தந்தைக்கு எப்படி இருக்கும்?" என்றார். "பேனர்கள் கிழிக்கப்படுவது, விஷமிகளின் செயல்" எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜி.கே.மணியின் மகன் மற்றும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஏற்காததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, ராமதாஸ் "யாம் அறியேன் பராபரமே" என மூன்று முறை பதிலளித்தார்.