முன்மாதிரியாக மாறிய பிரதமர்! தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைத்த மோடி
செய்தி முன்னோட்டம்
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை(Convoy) 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோளை, அவரே முன்னின்று செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். சிறப்பு பாதுகாப்பு குழுவிற்கு(SPG) பிரதமர் அளித்துள்ள அறிவுறுத்தலின்படி, அவரது பாதுகாப்பு வளையத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கான்வாயில் அதிகளவில் EVகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமல்
குஜராத் மற்றும் அசாமில் அமல்
சமீபத்தில் குஜராத்தின் வதோதரா மற்றும் அசாமின் குவஹாத்தி ஆகிய இடங்களுக்குச் சென்றபோது, பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் விடுத்த "சிக்கன நடவடிக்கை" வேண்டுகோளுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பிரதமரின் இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் தங்களது கான்வாய் வாகனங்களைக் குறைத்து வருகின்றனர். மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தனது பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்களும் தங்களது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவிட்டுள்ளனர்.