
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். நவராத்திரி தொடங்கும் இந்த நாளில், இந்த புதிய சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி பச்சட் உத்சவ் அல்லது ஜிஎஸ்டி சேமிப்பு விழா என்று அழைக்கப்படும் என்றும், இது இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி, 2017 ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு முந்தைய வரி அமைப்புகளின் சிக்கல்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகள் காரணமாக ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்புவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை அவர் விளக்கினார்.
எளிமை
வரி அமைப்பில் எளிமை
உதாரணமாக, ஒரு வெளிநாட்டு செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். அதில், பெங்களூரிலிருந்து 570 கி.மீ தொலைவில் உள்ள ஹைதராபாத்திற்கு பொருட்களை அனுப்புவது மிகவும் கடினமாக இருந்ததால், ஒரு நிறுவனம் முதலில் ஐரோப்பாவிற்கு அனுப்பி, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்ப விரும்பியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் வரி அமைப்பை எளிதாக்கி, பொருட்களின் விலைகளைக் குறைத்து, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்று மோடி வலியுறுத்தினார். மேலும், பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி இல்லை அல்லது 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும் என்றும், இது நடுத்தர மக்களுக்கு ஒரு இரட்டை போனஸாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்எஸ்எம்இக்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சுதேசி
உள்நாட்டுப் பொருட்களுக்கு முக்கியத்துவம்
பிரதமர் மோடி தனது உரையில் மேலும், நமது தயாரிப்பு தரம் இந்தியாவைப் பெருமைப்படுத்த வேண்டும். சுதேசி நமது செழிப்பை அதிகரிக்கும். நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். ஒவ்வொரு வீடும் கடையும் சுதேசியைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இது நிகழும்போது, இந்தியா முன்னேறும்." என்று கூறினார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரத்தை இந்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் வலுப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.