Loading...
விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
07:46 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த முடிவை ஊடகங்களிடம் அறிவித்தார். இத்திட்டத்திற்காக 2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கு புதிய வரவு செலவுத் திட்டமாக ₹3,15,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி

தடையின்றி கிடைக்கும் ஆண்டுக்கு ₹6,000 நிதியுதவி

கடந்த 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ₹6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகையானது தலா ₹2,000 வீதம் மூன்று சம தவணைகளாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

பயிர் விதைப்பு மற்றும் சாகுபடி காலங்களுக்கு ஏற்றவாறு இந்தத் தொகையானது விடுவிக்கப்படுவதால், விதைகள் மற்றும் உரங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு இது பெரிதும் உதவியாக அமைகிறது.

விவசாயிகள்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பெரும் பலன்

இத்திட்டத்தின் மூலம் பலனடைபவர்களில் பெரும்பாலோர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

நிதி நெருக்கடியைக் குறைத்து, கந்துவட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதிலிருந்து இத்திட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கிறது.

இதுவரை 23 தவணைகள் மூலம் ₹4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தியிருப்பதுடன், அவர்களின் கடன் சுமையையும் பெருமளவில் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிதி விடுவிப்பு

23வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் திட்டத்தின் 23வது தவணை நிதியை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு விடுவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் மேற்கு வங்க அரசு இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

பிஎம் கிசான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கை, நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும்.

ADVERTISEMENT