பயணிகளிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது - நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவு
மாநகர பேருந்தின் பயணசீட்டிற்கு உரிய சில்லறை கொடுக்குமாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் நடத்துநர்கள் தொந்தரவு செய்வதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் அவர்கள் கொடுக்கும் பணத்தொகை அல்லது நாணயத்தினை வாங்கிக்கொண்டு அவர்களுக்கான பயணசீட்டை கொடுத்து மீத தொகையையும் வழங்க போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதேபோல் பணிமனைகளில் வழங்கப்படும் முன்பணத்தினை பயணிகளுக்கு பயணசீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சரியான சில்லறை கொடுக்க சொல்லி நிர்பந்தம் செய்யாமல் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும், இது சம்மந்தமான புகார்கள் பெறப்பட்டால், குறிப்பிட்ட அந்த நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.