Loading...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
08:53 am

செய்தி முன்னோட்டம்

வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடைபெறவுள்ள கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் இன்றைய நாடாளுமன்ற வியூகம் இறுதி செய்யப்படவுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், பெல்லட் துப்பாக்கிகள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த யார் அனுமதி அளித்தது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கோரிக்கை

பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரிக்கை

மாணவர்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதை மாணவர்களின் வெற்றியாக கருதும் காங்கிரஸ் கட்சி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மசோதா

புதிய தேர்வுகளுக்கான முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா 2026

வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், 'பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற முறைகளைத் தடுத்தல்) திருத்தச் சட்ட மசோதா, 2026' இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப் பட்டியலிடப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் தனிநபருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம் மற்றும் கூட்டுச் சதி மற்றும் அமைப்பாக்கப்பட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் நீட் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிய நிலையில், புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமா என்பது 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகே தெரியவரும்.

ADVERTISEMENT