Page Loader
பரமக்குடி கள்ளிக்கோட்டை கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
மாதிரி புகைப்படம்

பரமக்குடி கள்ளிக்கோட்டை கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2024
02:38 pm

செய்தி முன்னோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கும் கள்ளிக்கோட்டை கோவிலில், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "சிவன் சன்னதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்". "மேற்பகுதி முழுவதும் இடிந்துள்ள சிவன் சன்னதி முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் மேலும் இரு துண்டுக் கல்வெட்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

விவரங்கள் 

புதிய கல்வெட்டு விவரங்கள்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் கி.பி.13-ம் நூற்றாண்டு காலத்து பாண்டியர் கல்வெட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் ஸ்ரீகோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாக இருக்கலாம். மற்றொரு கல்வெட்டில், இக்கோயிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசிக் குறுவை விளையும் கலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி)விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. "இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் வருகின்றன" என அவர் தெரிவித்தார்.

வரலாறு

கோவில் வரலாறு

கோயிலில் உள்ள பாண்டியர் கால துண்டுக்கல்வெட்டுகளின் சொற்களைக் கொண்டு இவை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடையவை எனக் கருதலாம் என கூறப்படுகிறது. அம்மன் சன்னதியில் உள்ள கி.பி.1538-ம் ஆண்டு கால கல்வெட்டில், நாடாமங்கலமான சுந்தரத்தோள் நல்லூர் என இவ்வூரும், நயினார் தவச்சக்கரவத்திஸ்வரமுடைய நயினார் என இறைவனும் அழைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்துள்ள அம்மன் சன்னதி அரைத்தூண்களில் நர்த்தன கணபதி, முருகன், நின்றநிலையில் லகுலீசபாசுபதரின் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பாண்டியர், சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இடிந்து அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை, பழமை மாறாமல் புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையை வே.ராஜகுரு கேட்டுக் கொண்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post