LOADING...
நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?
BAMS மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?

எழுதியவர் Venkatalakshmi V
May 12, 2026
09:45 pm

செய்தி முன்னோட்டம்

2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் (BAMS) மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர் சுபம் கைர்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் டெலிகிராம் செயலி வாயிலாக நீட் தேர்வின் கெஸ் பேப்பரை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த வினாத்தாளை ஹரியானாவை சேர்ந்த ஒருவருக்கு அவர் விற்றுள்ளதாக நாசிக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கைர்னரை தனது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-யின் நான்கு குழுக்கள் நாசிக்கிற்கு விரைந்துள்ளன.

திருப்பம்

வினாத்தாள் கசிந்த விதம்: புதிய திருப்பம்

நாசிக்கில் உள்ள ஒரு அச்சகத்திலிருந்துதான் வினாத்தாள் கசிந்ததாக முன்னதாகக் கூறப்பட்ட தகவலை போலீசார் தற்போது மறுத்துள்ளனர். வினாத்தாள் அங்கிருந்து கசியவில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) நடத்திய விசாரணையில், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கையால் எழுதப்பட்ட சில வினாக்கள் புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வினாத்தாளில் இருந்த 140 கேள்விகள், அசல் நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒத்துப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்து

தேசியத் தேர்வு முகமையின் (NTA) முடிவு

மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மே 12-ம் தேதி அந்தத் தேர்வை ரத்து செய்வதாக தேசியத் தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "மே 7-ம் தேதி மாலை இது குறித்த தகவல்கள் கிடைத்தன, அதனைத் தொடர்ந்து மே 8-ம் தேதி மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு இது குறித்த விவரங்கள் மாற்றப்பட்டன" என்று NTA தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement

விசாரணை

விசாரணையில் சிபிஐ தீவிரம்

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த முறைகேட்டில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருப்பது தெரியவந்துள்ளது. 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் முன்கூட்டியே கசிந்துள்ளதால், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மறுதேர்வு நடத்தப்படுமா அல்லது தகுதியின் அடிப்படையில் வேறு முறைகள் பின்பற்றப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement