Page Loader
13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை

13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2025
07:16 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஆவடியில் உள்ள ஒரு மையத்தில் தேர்வின் போது மின் தடை ஏற்பட்டதாகக் கூறி 13 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, நீட் 2025 முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த மே 5 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மையத்தில், சுமார் 464 மாணவர்கள் தேர்வுக்கு வந்தனர். கனமழை காரணமாக, தேர்வின் முக்கிய பகுதியான பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:15 மணி வரை மின் தடை ஏற்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மோசமான சூழல்

மோசமான சூழலால் கவனச் சிதறல்

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மோசமான வெளிச்சத்திலும், மன அழுத்த சூழ்நிலையிலும் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினர். கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை என்றும், தேசிய தேர்வு முகமைக்கு அளித்த புகார்கள் கவனிக்கப்படாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து, வழக்கை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.