தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் இரண்டு மணி நேரம் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்துபவர்கள் இன்னும் பின்வாங்க தயாராக இல்லாததால், நெடுஞ்சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில், மராட்டிய கிராந்தி மோர்ச்சா தொழிலாளர்கள் சோலாப்பூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, ரயில் தண்டவாளத்தில் டயர்களை எரித்தும், காவி கொடிகளை ஏந்தியவாறும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
பஞ்சாயத்து அலுவலகத்தை தீ வைத்து எரித்த போராட்டக்காரர்கள்
இந்த விவகாரத்தில் ராம் ஜாதவ் மற்றும் நிஷாந்த் சால்வே என அடையாளம் காணப்பட்ட இரண்டு போராட்டக்காரர்களை ரயில்வே அதிகாரிகளும் சோலாப்பூர் நகர காவல்துறையும் கைது செய்தனர். அதிகாரிகள் போராட்டக்காரர்களை ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி இருந்தாலும், அங்கு இன்னும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில், ஒரு கும்பல் போராட்டத்தின் போது பஞ்சாயத்து அலுவலகத்தை தீ வைத்து எரித்தது. இதனால், அந்த அலுவலகத்தின் இரண்டு அறைகளில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. மகாராஷ்டிராவில் நிலவும் சூழ்நிலை குறித்து பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க மாநில அரசு சாதகமாக செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.