'நண்பன்' பட பாணியில், தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டிவந்த வாலிபர்
சனிக்கிழமையன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனைக்கு ஒருவர் தனது தாத்தாவை நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், அதே மருத்துவமனையில், நோயாளியின் சார்ட்களைத் தயாரிக்கும் வேலைக்காக அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஊழியர் ஆவர். சட்னா மாவட்டத்தில் உள்ள திகுரியா தோலாவில் வசிக்கும் தீபக் குப்தா என்பவர் தன்னுடைய தாத்தா மோதி லால் குப்தாவை பைக்கில் ஏற்றி கொண்டு, நேராக ICU க்குள் நுழைந்துள்ளார். அவரது பைக்கில் மற்றொரு நபர் தாத்தாவை பின்னாலிருந்து பிடித்து வந்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'நண்பன்' திரைப்படத்தில் வந்த காட்சி போன்றே நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.