ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்; 'ஹீரோவாகவே இருப்பார்' என மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த தருணத்தில், நாட்டுக்காக அவர் செய்த பல பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரை பாராட்டினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்த அவரது பொருளாதாரக் கொள்கைகளை பற்றி, தற்போதைய தலைவர்கள் மறந்துவிட்டனர் என்றும் விமர்சித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கார்கே வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மன்மோகன் சிங்கின் ஓய்வுடன் "ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது" என்று கூறினார். முன்னாள் பிரதமர் நடுத்தர வர்க்கத்தினருக்கும், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஒரு "ஹீரோ" ஆக இருப்பார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.
33 ஆண்டுகால அரசியல்!
"நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், நமது நாட்டின் குடிமக்களுடன் முடிந்தவரை அடிக்கடி பேசுவதன் மூலம் தேசத்தின் ஞானம் மற்றும் தார்மீக திசைகாட்டியின் குரலாக நீங்கள் தொடர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன்." கார்கே தெரிவித்துள்ளார். "உங்களை விட அதிக அர்ப்பணிப்புடனும், அதிக பக்தியுடனும் எங்கள் தேசத்திற்கு சேவை செய்ததாக மிகச் சிலரே சொல்ல முடியும். தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் உங்களைப் போல் சாதித்தவர்கள் வெகு சிலரே," என்று அவர் கூறினார். ஏப்ரல் 3ஆம் தேதி மன்மோகன் சிங்கின் ராஜ்ய சபா பதவிக்காலம் முடிவடையும் போது, நாடாளுமன்றத்தில் அவர் தனது 33 ஆண்டு பயணத்தை நிறைவு செய்வார்.