LOADING...
நடிகர் விஜய்க்கு பின்னடைவு: வருமான வரித்துறை விதித்த ₹1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
விஜய்க்கு வருமான வரித் துறை விதித்த ₹1.5 கோடி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

நடிகர் விஜய்க்கு பின்னடைவு: வருமான வரித்துறை விதித்த ₹1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
12:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த வருமான வரி தொடர்பான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த 2015-16 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ₹15 கோடி வருமானம் தொடர்பாக, வருமான வரித் துறை விதித்த ₹1.5 கோடி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த அபராத நோட்டீஸ் சட்டப்பூர்வ கால வரம்பிற்குள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், மேற்கொண்டு நிவாரணம் பெற தீர்ப்பாயத்தை அணுக விஜய்க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார்.

அவதானிப்புகள்

நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள்

வருமான வரி சட்டம் பிரிவு 263-ன் கீழ் வழங்கப்பட்ட இந்த நோட்டீஸ், உரிய கால வரம்பிற்குள் வழங்கப்பட்டதா என்பதே இந்த வழக்கின் முக்கிய கேள்வியாக இருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வருமான வரித் துறை வழங்கிய நோட்டீஸ் மற்றும் அபராத உத்தரவில் எந்தவிதமான நடைமுறை தவறுகளும் இல்லை என்றும், அது சட்டப்பூர்வமான கால வரம்பிற்குள் (Limitation period) வழங்கப்பட்டுள்ளது என்றும் உறுதி செய்தது.

பின்னணி

வழக்கின் பின்னணி

2015-ம் ஆண்டு சோதனையை தொடர்ந்து, 2017-ல் வருமான மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2018-ல் அபராத நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வருமான வரித் துறை மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஆகியவற்றிடையே பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் இந்த அபராதத்திற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய இறுதி தீர்ப்பில் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடவடிக்கை

அடுத்தகட்ட நடவடிக்கை

விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த அதே வேளையில், கால வரம்பை தவிர்த்து பிற காரணங்களுக்காக இந்த அபராதத்தை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (ITAT) அணுக விஜய்க்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், வருமான வரி துறை விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பதற்கான சட்டப்பூர்வமான வழிமுறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய்க்கு இந்தத் தீர்ப்பு ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது.

Advertisement