'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை அரிவாள் கொண்டு சக-மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் சம்மந்தப்பட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நெல்லையிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது குடும்பத்தார்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில், 'பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ததோடு, குற்றவாளிகளையும் கைது செத்துள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார்.
சிறப்பாக சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு
மேலும் அவர், 'சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ள சிறார்கள் மற்றும் அவரது கும்பத்தினரை இன்று(அக்.,28)நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். சிறப்பாக சிகிச்சையளித்த மருத்துவர்களையும் பாராட்டினோம்' என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், 'சிறார்களின் குடும்பத்தினரின் வேண்டுகோள்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு அளிக்கப்படுவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது' என்றும், 'நெல்லையிலுள்ள பள்ளியில் அந்த மாணவர்களை சேர்ப்பதற்காக மாறுதல் ஆணையமும் வழங்கப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயாருக்கு நெல்லை சத்துணவு மையத்தில் பணிக்கான மாறுதல் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 'பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்' என்று கூறியுள்ள அவர், 'சாதிய ஏற்றத்தாழ்வு-ஆதிக்கம் உள்ளிட்டவைகளை அழித்து சமத்துவ சமுதாயம் அமைத்திட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்' என்று தெரிவித்துள்ளார்.