Page Loader
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு

கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jul 06, 2024
02:10 pm

செய்தி முன்னோட்டம்

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார். இது அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்று ஆகும். ஏற்கனவே கேரளாவில் 3 சிறுவர்கள் இந்த நோயால் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போது இன்னொரு 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. வடக்கு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பய்யோலியில் வசித்து வந்த அந்த சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவன் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கேரளா

வெளிநாட்டில் இருந்து மருந்துகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

கடந்த மே மாதத்திலிருந்து இதுபோன்ற நான்கு வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளன. 4 பேருமே சிறுவர்கள் ஆவர். அவர்களில் மூன்று பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் ஒருவர், ஜூலை 1 ஆம் தேதி அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நோயை குணப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மருந்துகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, இந்த அமீபாவால் பாதிக்கப்பட்ட ஒரு 14 வயது சிறுவன் கடந்த ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்தான். அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி மே 21ஆம் தேதியும், கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ஆம் தேதியும் உயிரிழந்தனர்.