'இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு': பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இலட்சியங்களையும், அவரது கருணை மற்றும் சேவை மனப்பான்மையையும் பாராட்டினார். "அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க" இயேசு கிறிஸ்து பணியாற்றினார் என்றும், அவரது வார்த்தைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு என்றும் பிரதமர் கூறினார். "இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடும் ஒரு நாளாக கிறிஸ்துமஸ் உள்ளது. அவரது வாழ்க்கை இலட்சியங்களையும் மதிப்புகளையும் நினைவுகூர இது ஒரு சந்தர்ப்பமாகும்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் சேவையை பாராட்டிய பிரதமர் மோடி
மேலும் பேசிய பிரதமர் மோடி, "இயேசு கிறிஸ்து கருணை மற்றும் சேவை என்னும் இலட்சியங்களுக்காக வாழ்ந்தார். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க அவர் உழைத்தார். இந்த இலட்சியங்கள் நம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வழிகாட்டும் வெளிச்சமாகச் செயல்படுகின்றன." என்று தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, கிறிஸ்தவர்களுடனான தனது பழைய, நெருக்கமான மற்றும் அன்பான உறவுகளை நினைவு கூர்ந்தார். ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் கிறிஸ்தவர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பதாக பிரதமர் கூறினார். மேலும், சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவ சமூகம் ஆற்றிய பங்கிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, "நாட்டிற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது" என்று தெரிவித்தார்.