LOADING...
சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம்: மருத்துவத் துறையில் மத்திய அரசின் அதிரடி மாற்றம்.. ஜன் விஸ்வாஸ் சட்டம் சொல்வது என்ன?
ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026

சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம்: மருத்துவத் துறையில் மத்திய அரசின் அதிரடி மாற்றம்.. ஜன் விஸ்வாஸ் சட்டம் சொல்வது என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Apr 04, 2026
07:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜன் விஸ்வாஸ் (திருத்த விதிகள்) சட்டம் 2026, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குற்றங்களை வகைப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சுகாதாரத் துறையில் உள்ள சிறிய தொழில்நுட்பத் தவறுகள் அல்லது நடைமுறைச் சிக்கல்களுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறைத் தண்டனைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அபராதங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை செயல்படுத்த இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. சுமார் 23 அமைச்சகங்களின் கீழ் வரும் 79 மத்தியச் சட்டங்களில் உள்ள 784 விதிகள் இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளன. இதில் 717 விதிகள் தொழில் செய்வதை எளிதாக்கவும், 67 விதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவத் துறை

மருத்துவத் துறையில் ஏற்படும் நேரடித் தாக்கங்கள்

மருத்துவர்கள், சிறிய கிளினிக்குகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு இந்தச் சட்ட மாற்றம் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துருக்கிறது. உரிமம் புதுப்பித்தல், அறிக்கையிடல் அல்லது ஆவணப் பராமரிப்பு போன்ற சிக்கலான நடைமுறைகளில் எதிர்பாராமல் ஏற்படும் சிறிய பிழைகளுக்காக இனி அவர்கள் குற்றவியல் வழக்குகளையோ அல்லது சிறைத் தண்டனையையோ எதிர்கொள்ளத் தேவையில்லை. இதற்குப் பதிலாக அபராதங்கள் அல்லது எச்சரிக்கைகள் மூலம் அத்தகைய தவறுகளைச் சரிசெய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற சட்டப் போராட்டங்கள் தவிர்க்கப்பட்டு, மருத்துவமனைகள் தடையின்றித் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கான சிகிச்சைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.

தீர்ப்பாய முறைகள்

திருத்தப்பட்ட முக்கியச் சட்டங்கள் மற்றும் தீர்ப்பாய முறைகள்

இந்தத் திருத்தங்கள் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, மருந்தியல் சட்டம் 1948, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், கிளினிக் நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2010 உள்ளிட்ட பல முக்கியச் சட்டங்களில் பிரதிபலிக்கின்றன. அபராதங்களை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் கூடிய முறையான தீர்ப்பாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள தெளிவற்ற தன்மையைக் குறைப்பதுடன், வெளிப்படையான முறையில் அபராதங்கள் விதிக்கப்படுவதை உறுதி செய்யும். இத்தகைய கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை, மருத்துவ நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தளர்வுகள்

பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல்: தளர்வுகள் யாருக்குக் கிடையாது?

சிறு தவறுகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரமான விதிமீறல்களுக்கு இந்தச் சட்டம் எவ்விதச் சலுகையையும் வழங்கவில்லை. நோயாளிகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் செயல்கள், நெறிமுறையற்ற மருத்துவ நடைமுறைகள் அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் தீங்கான செயல்கள் தொடர்ந்து கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நடைமுறை ரீதியான பிழைகளுக்கும், உயிருக்கு ஆபத்தான குற்றங்களுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை இந்தச் சட்டம் வரைந்துள்ளது. இதன் மூலம் சிறிய தவறுகள் மன்னிக்கப்படும் அதே வேளையில், பொறுப்பற்ற செயல்களுக்கான பொறுப்புக்கூறல் எவ்விதத்திலும் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement