
அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்
செய்தி முன்னோட்டம்
சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.
ஜெர்மன் நாளிதழான ஃபிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் ஜெய்துங்கிற்கு அளித்த பேட்டியில், டாக்டர் ஜெய்சங்கர், இந்திய ராணுவ நடவடிக்கைதான் பாகிஸ்தானை தாக்குதலை நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்ல வைத்தது என்று கூறினார்.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மே 7 அன்று பதிலடி கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது.
ஆனால், அதை முறியடித்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் வலுவான பதிலடிகளைக் கொடுத்தது.
அமைதி
அமைதியை நிலைநாட்ட இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு நடந்த இந்த பதிலடியால் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போனது.
இதையடுத்து, இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது எனும் சூழலில், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனெரல், இந்தியாவின் டிஜிஎம்வோவிடம் பேசி தாக்குதலை நிறுத்திக் கொள்ள கோரிக்கை வைத்திட்டார்.
அதை ஏற்று இந்திய ராணுவமும் தாக்குதலை நிறுத்திய நிலையில், பாகிஸ்தான் அமெரிக்காவுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் பகிரங்கமாக நன்றி தெரிவித்தது. எனினும், இந்திய தரப்பில் அமெரிக்கா வெறுமனே கவலையை வெளிப்படுத்தியதாகவே கூறுகிறது.
"பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விரும்பினால், அவர்களின் ஜெனரல் எங்களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று அமெரிக்கா உட்பட அனைவருக்கும் நாங்கள் தெளிவுபடுத்தினோம். அதுதான் நடந்தது." என்று ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.