ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் 1.5 பில்லியன் டாலர்: கோவையில் அண்ணாமலை பேச்சு
செய்தி முன்னோட்டம்
கோவையில் நடைபெற்ற மேஜர் மதன் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். "இளைஞர்களும் மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பையும் தியாகத்தையும் இந்த நூல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இது இளைஞர்களை ராணுவத்தில் இணைய ஊக்கப்படுத்தும்." என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
பாதுகாப்புத் துறை பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்
தொடர்ந்து பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்தியா 408 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்துள்ளது.
இன்றைக்கு இந்தியாவின் பொருளாதாரம் 4.1 டிரில்லியன் டாலராக பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது.
நமது நாட்டின் மொத்தப் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 0.47 சதவீதம் மட்டுமே இதற்காக செலவிடப்பட்டுள்ளது." என்று சுட்டிக்காட்டினார்.
ஒப்பீடு
25 பைசா நாணயம் vs 500 ரூபாய் நோட்டு ஒப்பீடு
பொருளாதார ரீதியாக இந்தியாவின் வலிமையை விளக்கிய அவர், "பாகிஸ்தானின் மொத்தப் பொருளாதார மதிப்பு 375 பில்லியன் டாலர் மட்டுமே.
இது இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பிற்கு சமமானது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பீடு என்பது 25 பைசா நாணயத்தையும் 500 ரூபாய் நோட்டையும் அருகருகே வைப்பதற்கு சமமானது.
சீனா, துருக்கி போன்ற நாடுகள் தங்களது ஆயுதங்களை சோதனை செய்யவே பாகிஸ்தானைப் பயன்படுத்துகின்றன." என்றார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம்
இந்திய ராணுவத் தாக்குதலின் தாக்கத்தைக் குறிப்பிட்ட அண்ணாமலை, "ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட மொத்த சேதம் 1.5 பில்லியன் டாலர் ஆகும்.
பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் சேதமடைந்த தளவாடங்களை மீண்டும் வாங்குவதற்காக அவர்களுக்கு இந்த அளவிற்கு மிகப்பெரிய இழப்பு நேரிட்டுள்ளது." என விவரித்தார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை வளர்ச்சியில் அப்துல் கலாமின் பங்கு, எதிரி நாடுகளை கையாள்வதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடு என பல விஷயங்களையும் தனது உரையில் குறிப்பிட்டார்.