Loading...
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு

இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2026
10:00 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல் கப்பலான 'ஐஎன்எஸ் நிஸ்தார்' ஒப்படைக்கப்பட்ட சரியாக ஓராண்டிற்குள் இந்த இரண்டாவது கப்பலும் சேர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் 'நிபுண்' என்றால் ஒரு குறிப்பிட்ட துறையில் மிகுந்த திறமை, ஆற்றல் மற்றும் வல்லமை பெற்றவர் என்று பொருளாகும். அந்தப் பெயருக்கு ஏற்பவே, இக்கப்பல் ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 118 மீட்டர் நீளமும், 8,560 டன்களுக்கு அதிகமான எடையும் கொண்ட இக்கப்பல், இந்தியக் கடற்பதிவு அமைப்பின் (IRS) வகைப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தொழில்நுட்பம்

இக்கப்பலின் ஒட்டுமொத்த மதிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான உதிரிபாகங்கள், அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படாமல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கப்பல்களைத் தயாரிப்பதில் வரலாற்று ரீதியாகச் சில வெளிநாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்தியாவின் இந்த சாதனை உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

டைனமிக் பொசிஷனிங் அமைப்பின் மூலம் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துதல், வீரர்கள் கடலுக்கு அடியில் தங்கிப் பணியாற்றும் 'சாச்சுரேஷன் டைவிங்', ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் DSRV கப்பல்களுக்குத் தாய் நாவாயாகச் செயல்படுதல், மற்றும் தொலைவிலிருந்து இயங்கும் வாகனங்கள் (ROVs) மூலம் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

தயாரிப்பு

துரிதமான தயாரிப்பும் எதிர்கால இலக்கும்

முதல் கப்பல் ஒப்படைக்கப்பட்ட ஓராண்டிற்குள் இரண்டாவது சிக்கலான கப்பலையும் வெற்றிகரமாக ஒப்படைத்திருப்பது, இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் கடல்சார் கப்பல் கட்டும் திறன் மற்றும் உற்பத்தியின் தொடர் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

முறையான பரிசோதனைகளுக்குப் பிறகு விரைவில் 'நிபுண்' முழுமையாகப் படையில் இணைக்கப்படவுள்ள நிலையில், இது இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பலத்தை இரட்டிப்பாக்கும்.

ADVERTISEMENT