இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்
ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். அந்த சமயத்தில், அது என்ன என்பது பலருக்கும் தெரியாததால் அதை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து படம் எடுத்து வைத்திருக்கின்றனர். இந்த தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. இந்த தீவுகள் வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியாவின் ஏவுகணை சோதனை பகுதிகளுக்கு அருகில் உள்ளது. மேலும், இது மலாக்கா-ஜலசந்தி அருகே அமைந்திருக்கிறது. மலாக்கா-ஜலசந்தி என்பது சீனா மற்றும் பிற வட ஆசிய நாடுகள் உபயோகிக்கும் கடல்வழி பாதையாகும். இந்த இடத்தில் தடை ஏற்பட்டால் ஆசிய நாடுகளின் கடல் வழி போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்படும்.
மலிவான ஆயுதங்கள் மூலம் வேவு பலூன்களை வீழ்த்த முடிவு
"சீன வேவு" பலூன்களை அமெரிக்க சுட்டு வீழ்த்தியதற்கு பிறகு, 2022இல் இந்தியாவின் மேல்பறந்து கொண்டிருந்த பலூன் என்னவாக இருக்கும் என்ற கேள்வி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதை மீண்டும் ஆராய அவர்கள் முடிவு செய்துள்ளனர். இனி அது போன்ற பறக்கும் பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைந்தால் அதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சந்தேகத்திற்குரிய சீன கண்காணிப்பு பலூனை வீழ்த்துவதற்கு விலையுயர்ந்த Aim-9X Sidewinder ஏவுகணையைப் பயன்படுத்திய அமெரிக்காவைப் போலல்லாமல், போர் விமானங்கள் அல்லது டிரான்ஸ்போர்ட்டர் விமானங்களில் இணைக்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கிகள் போன்ற மலிவான ஆயுதங்கள் மூலம் அந்த பலூன்களை வீழ்த்தலாம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.