உலகின் மிக வெப்பமான நகரங்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்; மின்சார தேவை புதிய உச்சம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் கோடைகால வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகிலேயே தற்போதைய நிலையில் மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள 100 நகரங்களின் பட்டியலில், 97 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை (மே 22) காலை நிலவரப்படி உலகின் மிக வெப்பமான முதல் 50 நகரங்களின் பட்டியலிலும் இந்திய நகரங்களே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
வெயில்
48 டிகிரியைத் தாண்டிய வெயில் கொடூரம்
வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் வறண்ட வடமேற்கு காற்று மற்றும் மேகமூட்டமற்ற வானிலை காரணமாக ஒரு பிரம்மாண்ட 'வெப்பக் குமிழ்' உருவாகியுள்ளது. ஒடிசாவின் பலாங்கிர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் 48 டிகிரி செல்சியஸை எட்டி உலகிலேயே மிக வெப்பமான இடமாக மாறியுள்ளது. பீகாரின் சாசாராம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய நகரங்களில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பண்டா, பரேலி, அயோத்தி போன்ற நகரங்களில் நண்பகலுக்கு முன்பே 42 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்துள்ளது. வட இந்தியப் பகுதிகளில் இந்த வெப்ப அலை மே 27 வரை நீடிக்கும் என IMD ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மின்சாரத் தேவை
புதிய உச்சத்தைத் தொட்ட மின்சாரத் தேவை
வெப்பத்தின் தகிப்பு தாளாமல் பொதுமக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி, ஏர் கூலர்கள் மற்றும் மின்விசிறிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், நாட்டின் மின்சாரத் தேவை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று (மே 21) மதியம் 3:45 மணியளவில் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை புதிய வரலாற்றுச் சாதனையாக 270.82 கிகாவாட்டாக பதிவாகியுள்ளது. இது தொடர்ந்து நான்காவது நாளாகப் பதிவான மிக அதிகபட்ச மின் நுகர்வாகும். டெல்லியில் மட்டும் நேற்று 8,231 மெகாவாட் மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது, இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெப்பமான இரவைக் குறிக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் நாட்டின் மின் தேவை 271 கிகாவாட்டாகவும், ஜூலையில் 283 கிகாவாட்டாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திகள்
மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரசின் உத்திகள்
மத்திய மின்சார அமைச்சகம் இந்த இமாலய மின் தேவையை எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாகக் கையாண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்காகப் பல அதிரடி நடவடிக்கைகள் முற்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. கோடைக்காலம் முடியும் வரை எந்தவொரு அனல் மின் நிலையமும் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் நீர்மின் உற்பத்தியை (Hydropower) சேமித்து வைத்து, அதற்குப் பதிலாகச் சூரிய ஒளி (Solar) மின்சாரத்தைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் காற்று ஆலை மின்சாரமும் கைகொடுக்கும்.