
இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை தொடரக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மியான்மர் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை
கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்
IMD அறிக்கைப்படி, இன்று (செப். 26) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், நாளை (செப். 27) கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 6 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.