ஜிஎஸ்டி வசூலில் புதிய மைல்கல்! ஜூலை மாத வசூல் ₹2.11 லட்சம் கோடியாக உயர்வு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நுகர்வுத் திறன் தொடர்ந்து வலிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜூலை 2026 மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 15.4 சதவீதம் உயர்ந்து ₹2.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தகம் சீராக உயர்ந்து வருவதோடு, வெளிநாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் கணிசமாக அதிகரித்ததே இந்த சாதனை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
இறக்குமதி
இறக்குமதி மூலம் கிடைத்த வரி வருவாயில் உயர்வு
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ₹1.83 லட்சம் கோடியாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்போது ₹2.11 லட்சம் கோடியாக உயர்ந்து தொடர்ந்து பல மாதங்களாக ₹2 லட்சம் கோடிக்கும் மேல் நீடித்து வருகிறது.
இதில் உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைத்த வரி வசூல் 10.1 சதவீதம் உயர்ந்து ₹1.45 லட்சம் கோடியாக உள்ளது.
அதேவேளையில், வெளிநாடுகளிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 28.8 சதவீதம் வரை உயர்ந்து ₹66,511 கோடியைத் தொட்டுள்ளது.
திரும்ப அளிக்கப்பட்ட ரீஃபண்ட் தொகைகள் போக நிகர ஜிஎஸ்டி வசூல் ₹1.81 லட்சம் கோடியாகும்.
புள்ளிவிவரங்கள்
ஜிஎஸ்டி தரவுகளின் முக்கியப் புள்ளிவிவரங்கள்
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெறப்பட்ட ₹1.31 லட்சம் கோடி உள்நாட்டு ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ₹1.45 லட்சம் கோடி வசூலாகி 10.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இறக்குமதி மூலம் கடந்த ஆண்டில் கிடைத்த ₹51,648 கோடி ஜிஎஸ்டித் தொகையானது தற்போது ₹66,511 கோடியாக உயர்ந்து 28.8 சதவீத அதிரடி வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகத் திரும்ப அளிக்கப்பட்ட ₹29,968 கோடி ரீஃபண்ட் தொகையைக் கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டின் ₹1.56 லட்சம் கோடியிலிருந்து 15.8 சதவீதம் அதிகரித்து ₹1.81 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மாநிலங்கள்
மாநில வாரியான வரி வசூல் நிலவரம்
நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஹரியானா மாநிலம் அதிகபட்சமாக 25 சதவீத வளர்ச்சியையும், குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் தலா 19 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
பஞ்சாப் மற்றும் கேரளா 16 சதவீதமும், உத்தரப் பிரதேசம் 15 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய வரி பங்களிப்பாளரான மகாராஷ்டிரா 13 சதவீதமும், கர்நாடகா 12 சதவீதமும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
எனினும், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் வரி வசூல் சற்று குறைந்துள்ளது.
நிதியாண்டு
நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களின் பங்களிப்பு
2026-27 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹8.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட வசூலான ₹7.66 லட்சம் கோடியை விட 10.1 சதவீதம் அதிகமாகும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஜூலை 31 டன் நிறைவடைந்த மேல்முறையீட்டு வரம்பு காலக்கெடு போன்றவை இந்த வரி வசூல் அதிகரிப்பிற்குப் பெரிதும் துணையாக இருந்துள்ளன என வரித்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.