ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன், 15 இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்கிறார், பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி 15 இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரான்சின் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலருடன் அவர் நேருக்கு நேர் கலந்துரையாடுவார். இரண்டு நாள் ஜி 20 உச்சி மாநாடு நாளை புது தில்லியில் தொடங்குகிறது. உலகப் பிரச்சனைகள் குறித்து பல விவாதங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் பிரதிநிதிகளுக்கான ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்த கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா அதிபருடன் தனிப்பட்ட இரவு விருந்து
ஜி 20 உச்சி மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, அவரது இல்லத்தில் தனிப்பட்ட விருந்து அளிக்கிறார். இன்று அதிகாலை இந்தியாவுக்கு புறப்பட்ட ஜனாதிபதி பைடன், பிரதமர் மோடியை சந்திக்க நேராக அவரது இல்லத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் தங்களது இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜிஇ ஜெட் என்ஜின் ஒப்பந்தம் மற்றும் சிவில் அணுசக்தி தொழில்நுட்பம் குறித்து பேசுவார்கள் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்