Page Loader
மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 

மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 

எழுதியவர் Sindhuja SM
Feb 17, 2024
11:12 am

செய்தி முன்னோட்டம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக பணம் கொடுத்து வாங்க முயற்சிப்பதாக அவரது கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கைத் தீர்மானம் டெல்லி சட்டசபையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்

இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரை பெற்ற டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி(இன்று) அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை மார்ச் 16ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த புதன்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியது. வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் கெஜ்ரிவாலிடம் கேட்டு கொண்டுள்ளது.