சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. நாள்தோறும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் மேல் மாடியிலுள்ள அவசர சிகிச்சை அளிக்கப்படும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில், காலை திடீரென தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. கரும் புகையுடன் தீயானது வேகமாக பரவ துவங்கியதை கண்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் செவ்வாப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் கொண்டுவர போராடியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்னும் கோணத்தில் காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளது. இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட உடனே அப்பகுதியில் இருந்த நோயாளிகள் உள்பட அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.