LOADING...
திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த முகவர்; 208 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் பரபரப்பு
கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த முகவர்

திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த முகவர்; 208 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
02:34 pm

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில், கீழ்பாலூர் பகுதியில் உள்ள 193வது வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி முகவர் ஒருவர் இயந்திரத்தைச் சேதப்படுத்தியது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இயந்திரம்

இயந்திரம் உடைக்கப்பட்ட விபரீதம்

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் பூத் ஏஜெண்ட் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்துச் சேதப்படுத்தினார். அந்த இயந்திரத்தில் ஏற்கனவே 208 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தச் செயல் வாக்குப்பதிவு நடவடிக்கையைத் தற்காலிகமாகப் பாதித்தது. இயந்திரத்தைச் சேதப்படுத்திய முகவரை காவல்துறை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுவாக்குப்பதிவு

மறுவாக்குப்பதிவுக்கான வாய்ப்பு

உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகியிருந்ததால், அந்தச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் விதிகளின்படி, இயந்திரம் சேதமடைந்தால் அல்லது வாக்குப்பதிவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மறுவாக்குப்பதிவு குறித்து முடிவெடுக்கப்படும். உயர் அதிகாரிகள் சாவடியைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதி: தேர்தல் களம்

கலசப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சரவணன், தற்போதைய வெற்றி வாய்ப்பைத் தக்கவைக்க முயன்று வருகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி களம் காண்கிறார். மேலும் தவெக சார்பில் ஏழுமலை மற்றும் நாதக சார்பில் கீதா ஆகியோரும் போட்டியிடுவதால், தொகுதி மிக முக்கியக் களமாகக் கருதப்படுகிறது. 2006 மற்றும் 2011ல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும், தற்போதைய எம்எல்ஏ சரவணனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

வாக்குப்பதிவு

தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருவண்ணாமலைச் சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மாநிலத்தில் சுமார் 37.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இதுபோன்ற சிறிய அசம்பாவிதங்களைத் தவிர்த்து, மாலை வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறத் தேர்தல் ஆணையம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement