PF பணத்தை தர தாமதித்த EPFO அமைப்பு; ஓய்வுபெற்ற ஊழியருக்கு 6% வட்டி வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரின் ₹14.06 லட்சம் PF தொகையை வழங்குவதில் 35 நாட்கள் தேவையின்றி தாமதம் செய்ததற்காக, அப்பணத்திற்கான 6 சதவீத ஆண்டு கூட்டு வட்டியை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (EPFO) மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதிய பலன்களை பெறும்போது ஏற்படும் சிறு தாமதமும் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, சந்தாதாரர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களின் நகல்கள், ரசீதுகள் மற்றும் தேதிகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையின்றி தாமதமானால் சட்டரீதியாக அணுகலாம் என்றும் இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
பின்னணி
வழக்கின் பின்னணி
பிளீட் மேரிடைம் சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், அக்டோபர் 19, 2016 அன்று தனது முழுமையான PF கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், அதில் ஆவண குறைபாடு இருந்ததாக கூறி EPFO தாமதித்து, டிசம்பர் 14 அன்றுதான் பணத்தை விடுவித்தது.
இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம், இ.பி.எஃப் திட்டம் 1952-ன் படி, முழுமையான மனு சமர்ப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் கோரிக்கை முடித்து வைக்கப்பட வேண்டும் எனவும், மனு முழுமையடையவில்லை என்பதற்கான எவ்வித எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும் EPFO தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவித்தது.
இதனால், தாமதமான 35 நாட்களுக்கு ₹14,06,272 தொகைக்கு 6% வட்டி கணக்கிட்டு, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.