தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடத்தில் பேச்சுவார்த்தை எட்டியதாக செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில், தேர்தலை சந்திக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், திமுக சார்பாக தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேச என மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கவிருப்பது, கனிமொழி என்றும், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டி.ஆர்.பாலு தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.