'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில்
பெங்களூரில் பாலியல் தொழில் செய்ததாக மும்பையைச் சேர்ந்த நேஹா என்ற மெஹர் எனும் பெண்ணை கர்நாடக காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) கைது செய்ததாக IANS செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, மாடல் அழகியான நேஹா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவர் 20-50 வயதுடைய ஆண்களை ஹனி ட்ராப் செய்ய டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணும் அவளது கூட்டாளிகளும், பாதிக்கப்பட்டவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதில் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தொடர் டார்ச்சரால் விரக்தியடைந்து காவல்துறையை நாடியதை அடுத்து விஷயம் வெளியே வந்துள்ளது.
ஆறு மாதங்களாக செயல்பட்ட கும்பல்
இந்த கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரில் இந்த வேலையை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் ஆகஸ்ட் 1ஆம் தேதி, பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சரண பிரகாஷ் பலிகேரா, அப்துல் காதர் மற்றும் யாசின் என அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20,000 பணத்தையும் காவல்துறை கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான நேஹாவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றத்தில் தொடர்புடைய நதீம் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பெங்களூர் காவல்துறை தேடி வருகிறது. நதீம், மாடல் அழகி நேஹாவின் காதலன் எனக் கூறப்படுகிறது.