வலி நிவாரணி மெஃப்டால் "பாதகமான" எதிர்வினைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை
மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டாலின் பாதகமான எதிர்விளைவுகளைக் கண்காணிக்க, சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருந்தக ஆணையம் (IPC). பொதுவாக, முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது, மெஃபெனாமிக் அமில வலி நிவாரணியான மெஃப்டால் தான். இந்திய பார்மகோவிஜிலன்ஸ் புரோகிராம் (பிவிபிஐ) தரவுத்தளத்தில் இருந்து பாதகமான மருந்து எதிர்விளைவுகள் பற்றிய ஆரம்ப ஆய்வு, ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் சிண்ட்ரோம் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய எதிர்வினைகளை வெளிப்படுத்தியதாக ஆணையம் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளது.
மெஃப்டால் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
இந்திய மருந்தக ஆணையம் கூறியது என்ன?
நவம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கையின்படி, "சுகாதார நிபுணர்கள், நோயாளிகள்/நுகர்வோர், சந்தேகத்திற்குரிய மருந்தின் பயன்பாட்டுடன் தொடர்புடைய மேற்கூறிய பாதகமான மருந்து எதிர்வினையின் (ADR) சாத்தியக்கூறுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய எதிர்வினை ஏற்பட்டால், மக்கள் ஆணையத்தின் கீழ் உள்ள பிவிபிஐயின் தேசிய ஒருங்கிணைப்பு மையத்திற்கு www.ipc.gov.in என்ற இணையதளத்தில் அல்லது ஆண்ட்ராய்டு மொபைல் செயலியான ஏடிஆர் பிவிபிஐ மூலம் ஒரு படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.