கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள்
கோவையில் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் தனது சிறு வயதில் இருந்தே வாகனங்களை ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்துள்ளார். அதனால் அவர் 2019ம் ஆண்டு லோட் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கான உரிமத்தினையும் அவர் பெற்றுள்ளார். கனரக வாகனங்களையும் இயக்க கற்றுக்கொண்ட அவர் மக்களுக்காக பேருந்து இயக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக வைத்திருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கோவை காந்திபுரத்தில் இருந்து சோமானூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்தில் ஓட்டுநர் பணி கிடைத்துள்ளது. அதனை ஏற்று அவர் பேருந்தினை ஓட்ட ஆரம்பித்ததையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஆணுக்கு நிகராக பேருந்து ஓட்டுவேன் - சர்மிளா
இந்நிலையில் இது குறித்து சர்மிளா பேசியதாவது, எந்த துறையாக இருந்தாலும் அதில் ஒரு படி மேலாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. என் அப்பா ஒட்டி வருகிறார். அவருக்கு உதவியாக நான் ஆட்டோவும் ஒட்டியுள்ளேன். ஆனால் நான் பேருந்து இயக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். இதற்காகவே கனரக வாகனங்களை ஓட்ட கற்றுக்கொண்டு உரிமத்தை பெற்றேன். ஆரம்பத்தில் சின் பெண்ணாக உள்ளதால் பேருந்து ஓட்ட யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஒருவழியாக நேற்று(மார்ச்.,31) முதல் பேருந்து ஓட்டும் பணியில் சேர்ந்துவிட்டேன். மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன், நிச்சயம் ஆண்களுக்கு நிகராக பேருந்தினை இயக்கி காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.