அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் எல்லைக்குள் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை உடனடியாக ஆய்வு செய்து மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு, அவை நிரந்தரமாக மூடப்பட உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.#TNDIPR pic.twitter.com/mMuGwzPLF6
— TN DIPR (@TNDIPRNEWS) May 12, 2026
நடவடிக்கை
இரண்டு வாரங்களில் முதல் கட்ட நடவடிக்கை
முதலமைச்சரின் இந்த உத்தரவின்படி, பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் நடமாடும் இடங்களான பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 255 கடைகள் முதல் கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்பட உள்ளன. இதற்கான பணிகளை டாஸ்மாக் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கிவிட்டனர். பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை மாற்றவும், மாற்று இடங்கள் தேடப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை தடுப்பு
பதவியேற்பு விழாவின் போதே, "போதைப்பொருள் மற்றும் மது காரணமாக குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடாது; சட்டம் ஒழுங்கில் சமரசம் இருக்காது" என்று முதல்வர் விஜய் உறுதி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என்று கூறப்படுகிறது. புதிய அரசின் இந்த அதிரடி முடிவுக்குப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சனைக்கு, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தீர்வு காணப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.