செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கொடூர் பகுதியினை சேர்ந்தவர் துரை(30), அவரது மனைவி ஜெயஸ்ரீ(28).
கொடூர் பகுதியிலேயே துரை மளிகை கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ஜெயஸ்ரீ கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து கர்ப்பமான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட்ட காரணத்தினால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து, பிரசவத்தின் பொழுது, குழந்தையின் வலது கை செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், இடது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சை
அலட்சியம் காட்டிய மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும், குழந்தையின் தலையில் இருந்து தொடர்ந்து 3 நாட்களாக ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது.
இது குறித்து மருத்துவரிடம் கூறியும், அவர்கள் சரியான பதிலும் அளிக்காமல், குழந்தையை பரிசோதனையும் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட ஜெயஸ்ரீயின் உறவினர்கள் நேற்று(ஜூலை.,14) செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அறைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் அங்கு இல்லாத காரணத்தினால் மருத்துவமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, தவறான சிகிச்சையளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் புகாரளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.