8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். "தற்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்தவொரு பரிந்துரையும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை." என்றார் அவர். வாழ்க்கைச் செலவைச் சரிசெய்யவும், பணவீக்கத்தால் அடிப்படை ஊதியத்தின் உண்மையான மதிப்பு குறைவதைத் தடுக்கவும், தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்படுகின்றன.
கோரிக்கை
ஊழியர் சங்கங்களின் கோரிக்கை
மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளதால், அதன் ஒரு பகுதியை அடிப்படை ஊதியத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. அகவிலைப்படியை இணைப்பதன் மூலம் அடிப்படைச் சம்பளம் உயரும், எதிர்கால அகவிலைப்படியானது திருத்தப்பட்ட இந்தத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதால், ஊழியர் சங்கங்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு, 50 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களின் சம்பளங்களைப் பரிசீலனை செய்ய, 8வது ஊதியக் குழுவினை அமைக்க சமீபத்தில் அனுமதித்தது. இந்த ஊதியக் குழுவானது தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்றும், இது ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.