பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: கடிதம் எழுதும் போட்டியில் வென்றால் ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப்
செய்தி முன்னோட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது. மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் உலகில் கடிதம் எழுதும் கலையை மீட்டெடுக்கவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பெரும் தொகையும், வெளிநாட்டுப் பயணமும் காத்திருக்கிறது. 'டிஜிட்டல் உலகில் மனித உறவுகள் ஏன் முக்கியம்?' என்பது பற்றி உங்கள் நண்பருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். 9 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள் மாணவர்களின் கடிதங்களை மார்ச் 20, 2026 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பரிசு
பரிசுகள் விபரம்
இந்தப் போட்டியில் மண்டல அளவிலும் (Circle Level), தேசிய அளவிலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50,000, சான்றிதழ் மற்றும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள UPU தலைமையகத்திற்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.25,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாம் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மண்டல அளவிலான பரிசுகள் முறையே ரூ.25,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 பரிசாக வழங்கப்படும்.
பங்கேற்பு
பங்கேற்பது எப்படி?
ஆர்வமுள்ள மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் மற்றும் முகவரி ஆகிய விபரங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும். இந்தப் போட்டி குறித்த கூடுதல் விபரங்களைச் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.