LOADING...
TVK கரூர் நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு CBI 'சம்மன்'
41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, CBI அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன

TVK கரூர் நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு CBI 'சம்மன்'

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2025
08:38 am

செய்தி முன்னோட்டம்

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற TVK தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான குழு கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் இந்த விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

விசாரணை

சமீபத்திய விசாரணை நடவடிக்கைகள்

சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் கூட்டத்தின் கொள்ளளவு (ஆட்களின் எண்ணிக்கை) குறித்து விசாரணை அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர். அங்கு கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க. நிர்வாகிகள்/உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட மொத்தம் 306 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திலும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.