10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு
கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விஜய் மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி, ஜுன்ஜுன்வாலா, பாபா ராம்தேவின் ருச்சி சோயா போன்ற தொழிலதிபர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட 10,09,511 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. 10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பபெறப்பட்டுள்ளது. கடந்த 5 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்: 2017-18 ரூ.1,61,325 2018-19 ரூ.2,36,265 2019-20 ரூ.2,34,171 2020-21 ரூ.2,02,782 2021-22 ரூ.1,74,968 மொத்தம் ரூ.10,09,511
கடன் தள்ளுபடி குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் அந்த கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே பொறுப்பாவார்கள். அவர்களிடம் இருந்து அந்த கடனைத் திரும்பப்பெற தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வரவு செலவு கணக்குகளை சீர் செய்ய வங்கிகள் கடன்களைத் தள்ளுபடி செய்வது வழக்கம். கடன் நிலுவையில் இருந்து கொண்டே இருந்தால் வங்கிகள் நஷ்டத்தில் ஓடும். இதனால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்று இந்த கடன்களைத் தள்ளுபடி செய்ததாக அறிவிக்கும். கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் கடன் தொகைக்கு கடன் பெற்றவர்களே முழு பொறுப்பு. அவர்களிடம் இருந்து அந்த கடன் தொகையை வாங்கவும் அதற்காக அவர்களை எதிர்த்து வழக்குத் தொடரவும் வங்கிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.