அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: SIT அமைப்பின் சீர்திருத்த பரிந்துரைகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பெட்டிகளில் இருந்து பணம் எடுக்கப்படும் செயல்முறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட பல சீர்திருத்தங்களை இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு (SIT) தற்பொழுது பரிந்துரைத்துள்ளது. ராமர் கோவில் நன்கொடை மோசடி புகார் நாடு முழுவதும் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. லக்னோ டிவிஷனல் கமிஷனர் விஜய் விஸ்வாஸ் பந்த் (IAS), ஐஜி கிரண் எஸ் (IPS) மற்றும் நிதித்துறை சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு, இடைக்கால நடவடிக்கையாகப் பல கடுமையான உத்தரவுகளைக் கோவில் நிர்வாகத்திற்குப் பிறப்பித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
SIT அமைப்பின் புதிய கட்டுப்பாடுகள்
பணம் எண்ணும் அறைக்குள் செல்லும் ஊழியர்கள் அனைவரும் பாக்கெட் இல்லாத ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் எண்ணும் பணியை முடித்து வெளியேறும் ஊழியர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்க தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கி தரப்பில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த குழு மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளனர். நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய்யிடம் விசாரணை குழு ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கோடு தொடர்புடைய முக்கிய நபர்கள் யாரும் விசாரணைக் காலம் முடியும் வரை அயோத்தியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் SIT உத்தரவிட்டுள்ளது.
பரிந்துரைப்பு
SIT பரிந்துரைத்துள்ள முக்கிய சீர்திருத்தங்கள்
கோவில் நிர்வாகத்தை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் விசாரணை குழு முக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, கோவில் அறக்கட்டளையை நிர்வகிக்க ஒரு அரசு நிர்வாக அதிகாரியை முதன்மை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பணக் காணிக்கைகளுக்கு தினசரி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் மற்றும் வாராந்திர தணிக்கை நடத்தப்பட வேண்டும். கோவில் வளாகத்தின் பாதுகாப்பு சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து வைக்கும் கால அளவை 45 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.