சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பால் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்க்கு ஆளாகினர். இதன் காரணமாக பல இடங்களில் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவைகளும் நடந்தது. இதனை தொடர்ந்து பால் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
இந்த மையங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பால் பவுடர், பால் உப பொருட்களும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி அண்ணாநகர், மாதவரம், அம்பத்தூர், அண்ணா நகர் கிழக்கு, மயிலாப்பூர், பெசன்ட் நகர், விருகம்பாக்கம். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 8 ஆவின் மையங்களில் இந்த 24 மணிநேர விற்பனை செய்யப்படவுள்ளது. இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், 'ஆவின் வரலாற்றில் முதல்முறையாக மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அடுத்து வரும் சில நாட்கள் இந்த 24 மணிநேர விற்பனை இன்று(டிச.,8) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது' என்று கூறியுள்ளார்.