Page Loader
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்
ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2025
08:58 am

செய்தி முன்னோட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பஞ்சாப் லூதியானா மேற்கு எம்எல்ஏ குர்பிரீத் கோகி தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்தது. மேலும் அவர் லூதியானாவின் டிஎம்சி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினர். துணை போலீஸ் கமிஷனர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறுகையில், "குர்ப்ரீத் கோகி தலையில் குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவம் அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது." எனக் கூறியுள்ளார்.

விசாரணை

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை

எம்எல்ஏவின் மரணம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என துணை போலீஸ் கமிஷனர் ஜஸ்கரன் சிங் தேஜா தெரிவித்தார். லூதியானா மேற்குத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கோகி, உள்ளூர் நிர்வாகத்தில் தீவிர ஈடுபாடு மற்றும் தனது தொகுதியின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டார். அவரது திடீர் மறைவு கட்சியினரையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்வதால், சம்பவம் மற்றும் அதன் விசாரணை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.