
ரயில் பயணிகள் கவனத்திற்கு, நாளை முதல் ஆதார் இணைப்புடன் மட்டுமே ஆன்லைன் தட்கல் டிக்கெட்!
செய்தி முன்னோட்டம்
நாளை (ஜூலை 1) முதல், ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால், ஆன்லைன் தட்கல் டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், போலி கணக்குகள் மற்றும் சட்டவிரோத செயலிகள் மூலம் ஏற்படும் துஷ்பிரயோகங்களும் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் எண்ணை இணைக்காத பயணிகள், எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட் பெற முடியாது; அவர்கள் நேரடி ரயில்வே கவுன்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கவுன்டர் டிக்கெட்
கவுன்டர் டிக்கெட்டிற்கும் ஆதார் ஒப்புதல் கட்டாயம்
எனினும், கவுன்டரிலும் ஜூலை 15ம் தேதியிலிருந்து OTP அடிப்படையில் ஆதார் ஒப்புதல் நடைமுறையை செயல்படுத்தும் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. இது, குறுகிய நேரத்தில் தட்கல் டிக்கெட்டுகள் விற்று தீர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுகிறது.
அட்டவணை
பயணிகள் அட்டவணையில் புதிய மாற்றம்
மாற்றங்களின் ஒரு பகுதியாக, தற்போது ரயில்வே துறை முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போது ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக தயாரிக்கப்படும் பயணிகள் இறுதி அட்டவணை, இனி 8 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், டிக்கெட் உறுதியாகாத பயணிகளின் தடுமாற்றங்களை தவிர்க்கவும், அவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட உதவவும் உருவாக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை செயலாக்கும் திறனுள்ள புதிய முன்பதிவு அமைப்பையும் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது.