LOADING...
ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி
தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்

ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2025
09:11 am

செய்தி முன்னோட்டம்

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நியூரோ ஐசியு வார்டின் சேமிப்பு அறையில் இரவு சுமார் 11:20 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரத்த மாதிரி குழாய்கள் வைக்கப்பட்டிருந்த அந்தச் சேமிப்பு அறையில், short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில், மருத்துவமனையில் 210 நோயாளிகள் இருந்தனர். நான்கு ஐசியுக்களிலும் தலா 40 நோயாளிகள் இருந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே ICU ஊழியர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

மீட்புப் பணி

மீட்புப் பணியில் சவால்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, முழு வார்டும் அடர்ந்த புகையால் நிரம்பியிருந்தது, இதனால் உள்ளே செல்வதற்கான அனைத்து வழிகளும் தடைபட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "கட்டிடத்தின் எதிர் பக்கத்திலிருந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீர் ஜெட்களைத் தெளிக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆனது. ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் தங்கள் படுக்கைகளுடன் அவசரமாக வெளியேற்றப்பட்டு சாலையோரத்திற்கு மாற்றப்பட்டனர்.