சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது. இன்று காலை, டெல்லி செங்கோட்டையில் காலை 7:30 மணி அளவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, சென்னையில், தலைமை செயலகத்தில், காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார். முன்னதாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திற்கு 8:30 மணி அளவில் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். அதன்பின்னர், முப்படை அதிகாரிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.