Page Loader
திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்
கொலை நடக்கும் போது, அதை தடுக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

எழுதியவர் Sindhuja SM
May 08, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொலை நடக்கும் போது, அதை தடுக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், டெல்லி சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பெனிவால், சிறப்புக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சிறப்புக் காவலர்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அங்கிருந்த தமிழக காவலர்களின் அலட்சியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

details

சம்பவம் நடந்த போது TNSP பணியாளர்கள் அங்கிருந்தனர்

"தமிழ்நாடு காவல்துறை தற்போது அதன் பணியாளர்கள் ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து, அவர்களை திரும்ப அழைத்துள்ளது" என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த எட்டாவது நம்பர் சிறை அறையில் TNSP பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். திகார் சிறை வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பு TNSPக்கு வழங்கப்பட்டுள்ளது. தில்லு தாஜ்பூரியா மீது தாக்குதல் நடத்தும் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காட்சிகளில், காவலர்கள் எதுவும் செய்யாமல் கொலையை வேடிக்கை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை காலை திகார் சிறைக்குள் கோகி கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் தாஜ்பூரியாவை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் நடக்கும் போது, காவலர்களும் அங்கு இருந்தனர்.